மும்பை ரியல் எஸ்டேட் மீண்டும் விர்ர்ர்... செயற்கை ஏற்றம் தான்

வியாழன், 11 பிப்ரவரி, 2010

மும்பை: மும்பையில் சரிவில் இருந்த ரியல் எஸ்டேட் தொழில், தற்போது மீண்டும் ஏற்றத்தை சந்திக்க துவங்கியுள்ளது. இதனால், அடுக்கு மாடி குடியிருப்புகள் மற்றும் காலி நிலங்களின் விலை, மீண்டும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே,மகாராஷ்டிரா மாநிலத்தில் ரியல் எஸ்டேட் தொழில் 'டல்'லடித்தது. குறிப்பாக, பொருளாதார மந்த நிலையால் ஏற்பட்ட பாதிப்பு, ரியல் எஸ்டேட் தொழிலில் கடுமையாக எதிரொலித்தது. மும்பை நகரத்தில் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டவர்கள் தான், இதில் அதிகம் பாதிக்கப்பட்டனர். கடந்தாண்டில் மட்டும் குடியிருப்புகளின் விலை 35 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி அடைந்தது.

மும்பை நகரின் முக்கிய பகுதியான வார்டன் சாலையில், மூன்று படுக்கை அறைகள், ஒரு ஹால், ஒரு சமையல் அறை ஆகியவற்றை கொண்ட ஒரு குடியிருப்பின் விலை, கடந்தாண்டின் துவக்கத்தில் ஒரு சதுர அடிக்கு 50 ஆயிரம் ரூபாயாக இருந்தது. பொருளாதார மந்த நிலையால், ரியஸ் எஸ்டேட் தொழில் கிடு, கிடு வீழ்ச்சியை சந்தித்ததை அடுத்து, அத் தொழிலில் ஈடுபட்டிருந்த பலர், அதில் இருந்து வெளியேறி, வேறு தொழில்களில் கவனம் செலுத்த துவங்கினர். ஆனால், கடந்தாண்டு மே மாதம் நடந்த லோக்சபா தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தல் ஆகியவற்றைத் தொடர்ந்து,ரியல் எஸ்டேட் தொழில் மீண்டும் ஏற்றமடைய துவங்கியது. தற்போது அடுக்கு மாடி குடியிருப்புகள் மற்றும் காலி நிலங்களின் விலை மெதுவாக அதிகரித்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால், இன்னும் சில மாதங்களில் ரியல் எஸ்டேட் தொழில் மீண்டும் உச்சத்தை அடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்தாண்டின் துவக்கத்தில் வார்டன் சாலையில் ஒரு சதுர அடி 50 ஆயிரம் ரூபாயாக இருந்த, குடியிருப்பின் விலை, தற்போது சதுர அடிக்கு 93 ஆயிரம் ரூபாயாக ஒரேயடியாக அதிகரித்துள்ளது. இந்த விலை ஏற்றம் மேலும் அதிகரிக்கும் என, தெரிகிறது.


காரணம் என்ன?: இதுகுறித்து, ரியல் எஸ்டேட் துறை வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த சில மாதங்களாக, மும்பையில் ரியல் எஸ்டேட் தொழிலுக்கான கிராக்கி மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. தற்போதுள்ள நிலையில் மும்பையில், குடியேறுவதற்கு தயரான வகையில் எந்த அடுக்கு மாடி குடியிருப்புகளும் காலியாக இல்லை. மேலும், புதிய குடியிருப்புகள் கட்டுவதற்கான அனுமதி வழங்குவதில், அரசு தரப்பில் கால தாமதம் ஏற்படுகிறது. இதனால், குடியிருப்புகளுக்கான தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாகவே, ரியல் எஸ்டேட் தொழில் மீண்டும் சூடு பிடித்துள்ளது. இருந்தாலும், இது ஒரு செயற்கையான ஏற்றமாகவே கருதப்படுகிறது. இவ்வாறு ரியல் எஸ்டேட் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.


பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரிக்கும்

சந்தை ஏற்றமும், இறக்கமும் கொண்டதாகவே இருக்கிறது. திங்கள், செவ்வாயின் லாபங்களை, புதன் சரிக்கட்டி விட்டது. திங்களன்று மும்பை பங்குச் சந்தை மிகக் குறைவான லாபமான, 20 புள்ளிகளில் முடிந் தது. நேற்று முன்தினம் சந்தை சிறிது நிமிர்ந் தது. அதாவது, உலகளவில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னைகளில் சிறிது தளர்வு தான் காரணம். ஐரோப்பாவில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் சரிசெய்யக் கூடியவை தான், அவை பல நாடுகளுக்கும் பரவும் அபாயம் இல்லை என்ற செய்திகள் சந்தையை மகிழ் வித்தன. ஆதலால், மும்பை பங்குச் சந்தை 107 புள்ளிகள் கூடி முடிந்தது. நேற்று வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிகம் விற்றதால், சந்தை கீழே விழுந்தது. சமீபத்தில் அவர்கள் விற்பது தொடர்கதையாகிவிட்டது. பட்ஜெட்டுக்கு பிறகு வாங்குவார் கள். ஆதலால், நேற்று இறுதியாக மும்பை பங் குச் சந்தை 120 புள்ளிகள் குறைந்து, 15,922 புள்ளிகளுடனும், தேசிய பங்குச் சந்தை 35 புள்ளிகள் குறைந்து 4,757 புள்ளிகளுடனும் முடிந்தது.

அரசின் சலுகைகள்: கடந்த இரண்டு ஆண்டுகளாக பல நாடுகளும் பலவிதமான சலுகைகளை அறிவித்து வந்தன. அதாவது, நாட்டின் நலனைக் கருதி அரசின் பணம் பல லட்சம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டது, பலவிதமான சலுகைகள் வழங்கப்பட்டன. தற்போது பல நாடுகளின் நிலைமை திருப்திகரமாக உள்ளது. ஆதலால் அந்த சலுகைகளை திருப்பப் பெற வேண்டும், இல்லாவிடில் அது இன்னொரு நீர்க்குமிழிக்கு காரணமாகி விடும் என்று மார்கன் ஸடான்லியின் தலைவர் ரோச் கூறியுள்ளார். ஆனால், இந்தியாவில் சலுகைகள் எல்லாம் படிப்படியாக தான் குறைக்கப்படும், ஒரேயடியாக குறைக்கப்படாது என அறிவிக்கப் பட்டுள்ளது. மேலும், இந்தியா, சீனாவை விட சிறப்பாக பரிணமிக்கும் என்றும் கூறியுள்ளார்.


சந்தைக்கு கேட்கிறதா? கூடப்போகும் பெட்ரோல், டீசல் விலை: பெட்ரோல், டீசல் விலை கூடவுள்ளதாக அறிவிப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால், இதற்கெல்லாம் பயப்படாமல் கார்கள் விற்பனை கூடிக்கொண்டே செல்கிறது. ஜனவரி விற்பனையும் கூடியுள்ளது. கார்கள் என்ன தண்ணியிலா ஓடுகிறது? பெட்ரோல், டீசல் விலை உயர்வு நிச்சயம் பணவீக்கத்தை அதிகரிக்கும். சந்தைக்கும் அபாயம் தான்.


புதிய வெளியீடுகள்: அரசு கம்பெனியான கோல் இந்தியா, தனது புதிய வெளியீடை கொண்டு வரவுள்ளது என்ற செய்தி வந்ததை அடுத்து, பல அரசு கம்பெனிகளின் பங்குகள் சரசரவென கூடின. குறிப்பக இன்ஜினியர்ஸ் இந்தியா, இந்துஸ்தான் காப்பர், டிரெட்ஜிங் கார்ப்பரேஷன் போன்றவை. சமீபத்தில் வெளியிடப்பட்ட புதிய வெளியீடான டெமினோஸ் பிட்சாவின் இந்திய துணை நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் பட்டியலிடப்பட்ட போது 58 சதவீதம் பிரிமியத்தில் சென்று முடிந்தது. இதிலிருந்து என்ன தெரிகிறது, பிட்சாவிலும் பணம் பண்ணலாம்.


வரும் நாட்கள் எப்படி இருக்கும்? திங்கள், செவ்வாய் என சிறிது நிமிர்ந்த சந்தை நேற்று பெரிதாக சரிந்து, இன்னும் சரிவு இருக்கிறது என்று கோடிட்டு காட்டி விட்டு சென்றுள்ளது. பட்ஜெட்டுக்காக காத்திருக்கிறது பங்குச் சந்தை.


சேதுராமன் சாத்தப்பன்
ஆம்பிவேலி சிட்டி – மும்பை விமான போக்குவரத்து துவக்கம்
ஆம்பி வேலி சிட்டி: ஆம்பி வேலி சிட்டி மற்றும் மும்பை இடையே வாரத்திற்கு ஆறு விமான போக்குவரத்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி: மகாராஷ்டிராவைச் சேர்ந்த இரண்டு பெருநகரங்களான மும்பை மற்றும் புனே இடையே அமைந்துள்ளது ஆம்பி வேலி சிட்டி. இந்த ஆம்பி வேலி சிட்டி மற்றும் மும்பை இடையே, வாரத்திற்கு ஆறு விமான போக்குவரத்து சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த போக்குவரத்து சேவை, கடந்த 5ம் தேதி துவங்கியது. இந்நிகழ்ச்சியில், மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல், சகாரா இந்தியா பரிவார் நிறுவனத்தைச் சேர்ந்த சுப்ரதா ராய் மற்றும் ஆம்பி வேலி சிட்டி தலைவர் சீமன்டோ ராய் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன் மூலம், ஆம்பி வேலி சிட்டியில் இருந்து 22 நிமிடங்களில், மும்பையை அடைந்து விடலாம். இந்த விமான போக்குவரத்து சேவை மும்பை மற்றும் ஆம்பி வேலி சிட்டி ஆகிய இடங்களில் பணியாற்றுபவர்களுக்கு பயனளிப்பதாக இருக்கும். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது

பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் பிரணாப் நம்பிக்கை
புதுடில்லி: 'இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்து, மத்திய புள்ளியியல் துறை தெரிவித்த அளவான, 7.2 சதவீதத்தை விட அதிகரிக்கலாம்' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பொருளாதாரம் மற்றும் சமூக வளர்ச்சி குறித்த கூட்டத்தில் பேசிய மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியதாவது: பொருளாதார வளர்ச்சி பற்றிய மூன்றாவது காலாண்டு தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளன. இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும் என, மத்திய புள்ளியியல் துறை முன் தெரிவித்திருந்ததை விட அதிகரிக்கலாம் என்பது என் கருத்து. எனினும், தற்போதைய நிலையில், 7.2 சதவீதம் வளர்ச்சி என்பது மோசமானது அல்ல. நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நிபுணர்கள் கணக்கிட்டுள்ளதை விட அதிகமாகவே இருக்கும். பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, குறிப்பிட்ட காலத்தில், இந்தியா கொள்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளது என்பதையே, நாட்டின் தற்போதைய பொருளாதார வளர்ச்சி காட்டுகிறது. இவ்வாறு பிரணாப் கூறினார்.


நாட்டின் மொத்த பொருளாதார வளர்ச்சி கடந்த ஐந்தாண்டுகளில் இருந்ததை விட, 2.1 சதவீதம் குறைந்து, கடந்த நிதியாண்டில், 6.7 சதவீதமாக இருந்தது. 2008ம் ஆண்டு, செப்டம்பரில், லேமன் பிரதர்ஸ் நிறுவனம் திவாலானதைத் தொடர்ந்து, உலகப் பொருளாதார மந்த நிலை தீவிரமானது. இதை சமாளிக்க, அரசு பல்வேறு விதமான ஊக்கச் சலுகைகளை வழங்கியது. இதையடுத்து, பொருளாதார நிலை சீரடைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


கிளென் அப்ளையன்சஸ் சிம்னி அறிமுகம்
புதுடில்லி: கிளென் அப்ளையன்சஸ் நிறுவனம், புதிய வகை சிம்னி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இது குறித்து வெளியிடப்பட்ட செய்தி: கிளென் அப்ளையன்சஸ் நிறுவனம், வெப்பம் மற்றும் எரிவாயு சென்சார்களுடன் தானே இயங்கும் வகையில், புதிதாக, 'ஜி.எல்., 6052 டச்' என்ற பெயரில் சிம்னி ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த சிம்னி, ஆரோக்கியமான, சுத்தமான மற்றும் பாதுகாப்பான சமையலறைக்கு ஏற்றது. இதில், 'டச் கன்ட்ரோல்' மற்றும் சக்திவாய்ந்த இத்தாலியன் மோட்டார் ஆகியவை உள்ளன. மேலும், இந்த சிம்னி அனைத்து வகையான சமையல் முறைக்கும் ஏற்ற வகையில் உறிஞ்சும் திறன் கொண்டது. இவற்றில் உள்ள சென்சார் கட்டுப்பாட்டால், சமையல் துவங்கியதும், சிம்னி தானே செயல்படத் துவங்கி விடும்.

அதே போன்று, சமையலறையில் வெப்பம் அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ அதற் கேற்ப, தன் செயல்படும் வேகத்தை மாற்றியமைத்துக் கொள்ளும். இதில் உள்ள எல்.பி.ஜி., சென்சார் கருவியால், எரிவாயு கசிவு ஏற்பட்டால், சிம்னி தானாகவே செயல்படத் துவங்கி, எரிவாயுவை உறிஞ்சி சமையலறையில் இருந்து வெளியேற்றி விடும். இதனால், எரிவாயு கசிவால் ஏற்படும் தீ விபத்து தவிர்க்கப்படும். இந்த சிம்னியில், தீப்பற்றாத பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 60 செ.மீ., அளவுள்ள சிம்னி, 13 ஆயிரத்து 990 ரூபாய் விலையிலும், 90 செ.மீ., அளவுள்ள சிம்னி 15 ஆயிரத்து 990 ரூபாய் விலையிலும் கிடைக்கின்றன. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது

குடியிருப்பு பற்றாக்குறை - ரூ. 3.6 லட்சம் கோடி தேவை: அரசு
புதுடில்லி: குடியிருப்பு பற்றாக்குறையை சரிசெய்ய 3 லட்சத்து 61 ஆயிரம் கோடி ரூபாய் ‌தேவைப் படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் சுமார் 25 மில்லியன் குடியிருப்பு யுனிட்கள் தேவைப் படுவதாகவும், இதற்காக ரூ. 3.6 லட்சம் கோடி முதலீடு செய்ய வேண்டியுள்ளது என்று மத்திய நகரப்புற முன்னேற்றத் துறை அமைச்சர் சியாகேட் ராய் தெரிவித்துள்ளார்.
மேலும், வருமானம் குறைந்த நகர் வாழ் மக்களுக்கு வீடுகள் அமைத்து தருவது அவசியம். இது அரசின் முக்கிய வேலை. இதற்காக அதிகளவு முதலீடு தேவைப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

4,20,000 கார்களை திரும்ப பெற்றது ஹோண்டா நிறுவனம்
நியூயார்க்: அமெரிக்க மற்றும் கனடாவில், சுமார் 4,20,000 கார்களை திரும்ப பெறுவதாக ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. இவை அனைத்தும் 2001 மற்றும் 2002ம் ஆண்டில் வெளியிடப் பட்ட மாடல்கள் ஆகும். விபத்தினை தடுக்க உதவும் ஏர்பேக் வசதி தொடர்பாக புகார்கள் எழுவதாகவும், இதனை சரிசெய்வதற்காக கார்கள் திரும்ப பெறப்படுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சமீபத்தில், ஹோண்டா நிறுவனத்தின் கார் ஒன்றில் ஏர்பேக் வேலை செய்யாமல் போனதால் ஒருவர் பலியானதாகவும், 11 பேர் காயம் அடைந்ததாகவும் புகார் எழுத்தது.

இதனை தொடர்ந்து 2001 மற்றும் 2002ம் ஆண்டில் வெளியிடப் பட்ட புதிய மாடல்களான சிவிக், ஓடிசி, சி.ஆர்-வி, மற்றும் 2002ல் அகுரா டி.எல் உள்ளிட்ட வாகனங்கள் திரும்ப பெறப் பட்டுள்ளன.

திரும்ப பெறப் பட்ட வாகனங்களில் ஏர்பேக் சரிசெய்யப் பட்டு அல்லது மாற்றப் பட்டு, மீண்டும் வாடிக்கையாளர்களிடம் அளிக்கப் படும் என்று ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.


ரயில்வே துறையின் வருவாய் உயர்வு
புதுடில்லி: நடப்பு 2009-10ம் நிதியாண்டில், ஜனவரி 31-ந் தேதி வரையிலான காலத்தில், இந்திய ரயில்வே துறையின் வருவாய் ரூ.70,501.65 கோடியாக உயர்ந்துள்ளது. இது, சென்ற நிதியாடின் இதே காலத்துடன் ஒப்பிடும்போது 8.56 சதவீதம் அதிகமாகும். அதாவது, ரூ.64,943.32 கோடி அதிகமாகும்.

இதே காலத்தில், ரயில்வே துறையின் மொத்த வருவாயில், பயணிகள் போக்குவரத்தின் வாயிலான வருவாய் ரூ.18,057.41 கோடியிலிருந்து ரூ.19,393.26 கோடியாக உயர்ந்துள்ளது. சரக்கு போக்குவரத்து வாயிலான வருவாய் 8.47 சதவீதம் அதிகரித்து, அதாவது ரூ.44,035.66 கோடியிலிருந்து ரூ.47,763.29 கோடியாக உயர்ந்துள்ளது.

கணக்கீடு செய்வதற்கு எடுத்துக்கொள்ள பட்ட 10 மாத காலத்தில், இந்திய ரயில்களில் பயணம் மேற்கொண்டோர் எண்ணிக்கை 4.59 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது.


வரும் 2010-11ம் நிதியாண்டிற்கான ரயில்வே பட்ஜெட் இம்மாதம் 24ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


நொய்டாவில் சாம்சங் நிறுவனத்தின் புதிய ஏ.சி., தயாரிப்பு பிரிவு
நொய்டா: நொய்டா தொழிற்பேட்டையில் குளிர்பதன ஏ.சி., தயாரிப்புக்கு என புதிய பிரிவினை சாம்சங் நிறுவனம் தொடங்கி உள்ளது. மின்சாதன பொருள்கள் உற்பத்தியில் முன்னணியில் உள்ள நிறுவனம் சாம்சங். இந்நிறுவனம் தற்போது, ஏ.சி., விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக நொய்டாவில் புதிய ஏ.சி., தயாரிப்பு பிரிவினை தொடங்கியுள்ளது. இதனை அந்நிறுவனத்தின் ‌தலைவர் ஜூட்ஷி தொடங்கி வைத்தார்.
நிறுவனத்தை தொடங்கி வைத்த ஜூட்லி, இதுகுறித்து கூறும்போது, தற்போது தொடங்கப்பட்டுள்ள ஆலை ஆண்டுக்கு 6 லட்சம் ஏ.சி.​ யூனிட்டுகளைத் தயாரிக்கும் திறன் கொண்டது. ஏற்கெனவே சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆலையில் 6 லட்சம் ஏ.சி.​ இயந்திரங்கள் தயாரிக்கப்படுகிறது.​ தற்போது புதிய ஆலை தொடங்கப்பட்டுள்ளதால்,​​ இந்நிறுவன உற்பத்தி ஆண்டுக்கு 12 லட்சமாக உயரும் என்று கூறியுள்ளார்.

மேலும், வாடிக்கையாளர்கள் புகார் செய்த ஒரு மணி நேரத்தில் பழுது நீக்குவோர் சென்றடையும் வகை செய்யப் பட்டுள்ளதாகவும், ஒரு நாளைக்கு மேல் பழுது நீக்க காலதாமதமானால்,​​ மாற்று ஏ.சி.​ பொருத்தித் தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ​

இந்த ஆண்டு 10 லட்சம் ஏ.சி.க்களை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளதாக கூறிய அவர், இதுகுறித்து மேலும் கூறும்போது, மின் அழுத்த வேறுபாட்டின்போது, சீரான செயல்பாட்டினை அளிப்பதற்காக, புதிய வகை ஏ.சி.,களில் யு.டி.ஆர் கம்ப்ரஸர்கள் பயன்படுத்தப் படுவதாகவும், இந்த எஸ் வரிசை கம்ப்ரஸர்களுக்கு ஸ்டெபிலைஸர்கள் தேவையில்லை என்றும் கூறினார்.

இதுதவிர, மைக்ரோஸ்கோபிக் வைரஸ்கள் மற்றும் துர்நாற்றங்களை வெளியேற்றுதல், டியோடரைஸிங் பில்டர்கள் என பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த வகை ஏ.சி.,களில் இடம்பெற்றுள்ளன என்றும் அவர் கூறினார்.

இந்திய வங்கித்துறை சிறந்து விளங்குகிறது: பிக்கி பாராட்டு
புதுடில்லி: இந்திய வங்கித் துறை சிறந்து விளங்குவதாக பிக்கி எனப்படும் இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் சம்மேளனம் பாராட்டு தெரிவித்துள்ளது.
பொருளாதார சரிவில் வளர்ந்த நாடுகள் கூட, மாட்டி கொண்டு முழித்த நிலையில், இந்திய பொருளாதாரம் நிதிநெருக்கடியில் சிக்காமல் நழுவியது.

நிதிநெருக்கடியில் சிக்காமல் இருந்ததற்கு இந்திய வங்கிகளின் செயல்பாடுகள் நன்றாக இருப்பதே காரணம் என்று பிக்கி தெரிவித்துள்ளது.

மேலும் இதுகுறித்து கூறும் ‌‌போது, பொருளாதாரத்தில் வேகமாக வளர்ந்து வரும் சீனா, பிரேசில், இங்கிலாந்து ஆகிய நாடுகளை காட்டிலும், இந்திய வங்கித் துறையின் நெறிமுறைகள் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டிருப்பதே, இந்தியா நிதிநெருக்கடியில் சிக்காமல் இருப்பதற்கு காரணம்.

இதனால் மற்ற நாடுகளை விட இந்திய வங்கித் துறை சிறப்பாக செயல்படுகிறது என்று இந்திய தொழில் வர்த்தக சங்கங்களின் சம்மேளனம் கூறியுள்ளது.

ரூ. 582 கோடியில் எல் அன்ட் டி நிறுவனத்திற்கு புதிய ஆடர்
மும்பை: லார்சன் அன்ட் டியூப்ரோ(எல் அன்ட் டி) நிறுவனத்திற்கு புதிதாக ரூ. 582 கோடி மதிப்பில் நான்கு புதிய ஆடர்கள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து மும்பை பங்குச்சந்தையிடம் அந்நிறுவனம் தெரிவித்துள்ள செய்தியில், ரூ. 267 கோடி( 58 மில்லியன் டாலர்) மதிப்பில் எப்.இ.டபுல்யூ.ஏ., நிறுவனத்திடம் இருந்து புதிய ஆடர் பெற்று இருப்பதாகவும், இது 13-15 மாதங்களுக்குள் முடிவடையும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதே போல, ரூ. 155 கோடி மதிப்பில் தமிழக மின்சார வாரியத்திடம் இருந்து புதிய ஆடர் பெற்று இருப்பதாகவும், இது 10 மாதங்களுக்குள் முடிவடையும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

உ.பி., பவர் டிரான்ஸ்மிஷன் கார்ப்ரேஷனிடம் இருந்து ரூ. 90 கோடி மதிப்பில் புதிய ஆடர் பெற்று இருப்பதாகவும், இது மார்ச் 15, 2011ல் தொடங்கி ஜூ‌லை 31, 2011க்குள் முடிவடையும் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

என்.எல்.சி., தமிழக பவர் லிமிடெடிடம் இருந்து 70 கோடி மதிப்பில் புதிய ஆடர் பெறப் பட்டுள்ளது. இது 34 மாதங்களுக்குள் முடிவடையும் என்று கூறப்படுகிறது.

இந்த அறிவிப்பு காரணமாக மும்பை பங்குச்சந்தையில், எல் அன்ட் டி நிறுவன பங்குகள் 1.06 சதவீதம் உயர்வினை கண்டன.


லிவர்பூல் பங்குகளை வாங்க முயற்சி: முகேஷ் அம்பானி மறுப்பு
லண்டன்: ரிலையன்ஸ் இன்டஸ்டிரீஸ் சேர்மன் முகேஷ் அம்பானி, லிவர்பூல் பங்குகளை வாங்க முயற்சி செய்வதாக வந்துள்ள தகவலை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
உலகப் புகழ் பெற்ற, அதிக வெற்றி பெற்ற கிளப், லிவர்பூல் கால்பந்து கிளப்பாகும். இந்த கிளப்பின் 51 சதவீத பங்குகளை முகேஷ் அம்பானி வாங்க முயற்சி மேற்கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியது.

இந்நிலையில், லிவர்பூல் கால்பந்து கிளப் பங்குகளை வாங்க தான் முயற்சித்ததாக எழுந்துள்ள செய்தியை முகேஷ் அம்பானி திட்டவட்டமாக மறுத்துள்ளார். அவர் சார்பில் ரிலையன்ஸ் நிறுவன செய்தி தொட்பாளர் இத்தகவலை நிருபர்களுக்கு தெரிவித்தார்.

உலக அளவில் 4,36,000 கார்களை திரும்ப பெற்றது டொயோட்டா
டோக்கியோ: ‌ஜப்பான் கார் நிறுவனமான டொயோட்டா நிறுவனம், உலக அளவில் 4,36,000 கார்களை திரும்ப பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதில், முதல் கிரீன் கார் என்ற அடைமொழியுடன் வெளியிடப் பட்ட பிரியஸ் உயர் ரக கார்களும் அடங்கும். இந்த வகை மாடலில் பிரேக்கிங் பிரச்னை இருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து, இந்த கார்களை திரும்ப பெறுவதாக ‌டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிதாக அறிமுகப் படுத்தப் பட்ட பிரியஸ் மாடல், பிரியஸ் பி.ஹெச்.வி., சாய் மற்றும் லெக்ஷியஸ் ஹெச்.எஸ்.250ஹெச் உள்ளிட்ட மாடல் கார்கள் திரும்ப பெறப் பட்டன.

ஜப்பானில் மட்டும் இந்த வகை கார்களை 2,23,068 வரை திரும்ப பெறப் பட்டுள்ளன. ஹைபிரிட் கார்கள் 2,13,000 வரை திரும்ப பெறப் பட்டுள்ளன.

சமீபத்தில்தான் அக்ஸலரேட்டர் பிரச்சினை காரணமாக அமெரிக்காவில் விற்கப்பட்ட டொயோட்டா நிறுவனத்தின் 8 மாடல் கார்கள் திரும்பப் பெறப்பட்டன என்பது குறிப்பிடத் தக்கது.

இதுகுறித்து ஏற்கனவே, அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில், குறைபாடுள்ள காரை விற்றதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும், இதற்காக தங்கள் வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளது. ‌பிரியஸ் கார் திரும்ப பெறப் பட்டு அதன் குறைகள் சரி செய்யப் பட்டு மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப் படும் என்றும் டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது

4ஜி மொபைல் சேவை : ஆலேசானையை தொடங்கியது டிராய்
புதுடில்லி : தொலைபேசி சேவை ஒழுங்குமுறை ஆணையமான டிராய் இந்தியாவில் 4 ஜி மொபைல் சேவையை அறிமுகப்படுத்துவதற்கான ஆ‌லோசனையை தொடங்கியது.

3ஜி சேவையை மிஞ்சும் வகையில் வைஃபை மற்றும் வைமேக்ஸ் கலவையுடன், மிகத்துல்லியமான வீடியோ, அதிவிரைவான டிஜிட்டல் பரிமாற்றம் உட்பட பல்வேறு உயர் தொழில்நுட்ப அம்சங்களைக் கொண்ட 4ஜி தொலைத் தொடர்பு சேவைகளில் ஏற்கனவே அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஜப்பான் நாடுகள் ஈடுபட்டுள்ளன.


மோட்டோரோலா மற்றும் எரிக்ஸன் போன்ற நிறுவனங்கள் தங்கள் உபகரணங்களில் 4ஜி சேவைகளை சோதித்தும் பார்த்துவிட்டன. இந்நிலையில், 3ஜி சேவையில் இந்தியா பின்தங்கிய நிலைமை 4ஜி சேவைக்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என 'டிராய்' கருதுகிறது.


இதனால், இப்போதே 4ஜி சேவைக்கான அலைவரிசை மற்றும் இதர விவகாரங்கள் குறித்து இந்திய தொலைத் தொடர்பு கட்டுப்பாட்டு அமைப்பான 'டிராய்' ஆராயத் தொடங்கியுள்ளது.

புதிய 2 ரூபாய் நாணயம்: ஆர்.பி.ஐ., வெளியிட்டது
சென்னை: கண் பார்வையற்றவர்களுக்கான 'பிரெய்லி' முறை எழுத்துக்களை அறிமுகப்படுத்திய லூயி பிரெய்லியின் 200வது பிறந்தநாளை முன்னிட்டு, புதிய 2 ரூபாய் நாணயங்களை இந்திய ரிசர்வ் வங்கி(ஆர்.பி.ஐ.,) வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கியின் பொது மேலாளர் எம்.எம்.​ மாஜி கூறும்போது,

இந்த நாணயம் ​​ 5.62 கிராம் எடை கொண்ட துருப்பிடிக்காத எவர்சில்வரால் வடிவமைக்கப்பட்டுள்ளது.​ இதில் 83 சதவீதம் இரும்பும்,​​ 17 சதவீதம் குரோமியமும் கலந்துள்ளன.இந்த நாணயம் 27 மில்லி மீட்டர் விட்டம் கொண்டது.


நாணயத்தின் பின்புறத்தில் லூயி பிரெய்லியின் படம் நடுவில் பொறிக்கப்பட்டிருக்கும்.​ மேற்புறத்தில் அவரது பெயர் ஹிந்தியிலும்,​​ ஆங்கிலத்திலும் இருக்கும், படத்தின் கீழ்புறம் அவரது பெயர் 'பிரெய்லி' முறையில் எழுதப்பட்டிருக்கும். இதேபோல, முன்புறத்தில் நாணயத்தின் முகம் இரு படுக்கைக் கோடுகளால் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும்.​ நடுப்பகுயின் இடதுபுறம் அசோகா தூணின் சிங்க முகம் பொறிக்கப்பட்டிருக்கும்.​ நடுப்பகுதியின் வலப்புறத்தில் நாணயத்தின் மதிப்பு இலக்கம் '2' என்பது சர்வதேச எண் அளவில் பொறிக்கப்பட்டிருக்கும். மேற்புறத்தில் இந்தியா என்று ஹிந்தியிலும்,​​ ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டிருக்கும் என்று கூறினார்.
தங்க கோவிலுக்கு காணிக்கை செலுத்தும் வசதி: ஹெச்.டி.எப்.சி., அறிமுகப் படுத்தியது
புதுடில்லி: தங்க கோவிலுக்கு காணிக்கை செலுத்தும் புதிய வசதியை ஹெச்.டி.எப்.சி., வங்கி அறிமுகப் படுத்தி உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரசில் அமைந்துள்ளது புகழ் பெற்ற தங்க கோவில். இந்த கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையை செலுத்தும் வசதியை ஹெச்.டி.எப்.சி., வங்கி செய்துள்ளது.

இது குறித்து வங்கியின் தலைமா செயல் அதிகாரி ஏ.ராஜன் கூறும் போது, பக்தர்கள் தங்க கோவிலுக்கு பல காரணங்களால் நேரடியாக வரமுடியாமல் உள்ளது. இவ்வாறு கோவிலுக்கு வர முடியாதவர்களுக்கு வசதியாக, நேரடியாக காணிக்கை செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. வங்கியின் இணைய தளத்தின் வாயிலாக நேரடியாக தங்க கோயிலுக்கு காணிக்கை செலுத்தலாம்.


தற்போது வங்கியின் மூலம் பல மதத்தை சேர்ந்த 37 புனித தலத்திற்கு காணிக்கை செலுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதை மேலும் அதிகரிக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம் என்று கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக