Reliance Industries

பங்குகளின் சந்தை மதிப்பு பன்மடங்கு அதிகரிப்பு
முன்னணி அந்தஸ்தை தொடர்ந்து தக்க வைத்துள்ள 3 நிறுவனங்கள்


ஷிகா சர்மா
இக்கனாமிக் டைம்ஸ் ஆய்வு பிரிவு
கடந்த 2000&ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திலிருந்து இதுவரையில், அதாவது 10 ஆண்டுகளாக, முன்னணி 10 நிறுவனங்களின் பட்டியலில் மூன்று நிறுவனங்கள் தொடர்ந்து இடம் பெற்று வருகின்றன. இதற்கு, இந்த நிறுவனங்களின் பங்குகளின் சந்தை மதிப்பு பன்மடங்கு அதிகரித்ததே காரணமாகும்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
முகேஷ் அம்பானி தலைமையின் கீழ் செயல்படும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சாஃப்ட்வேர் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் உள்ள இன்ஃபோசிஸ் டெக்னாலஜிஸ், எண்ணெய் மற்றும் துரப்பண பணிகளில் ஈடுபட்டு வரும் பொதுத் துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி. ஆகியவையே அந்த மூன்று நிறுவனங்களாகும்.
அரசியலில் ஏற்பட்ட மாற்றம், உலக அளவில் பொருளாதாரத்தில் உருவான கடும் பின்னடைவு போன்ற பல்வேறு சவால்களை எதிர்கொண்டு இந்நிறுவனங்கள் அவற்றின் அந்தஸ்தை நிலைநிறுத்தி, முதலீட்டாளர்களுக்கும் அதிக ஆதாயம் அளித்துள்ளன.
முதலிடம்
முதலீட்டாளர்களுக்கு அதிக ஆதாயம் அளிப்பதில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் (ஆர்.ஐ.எல்), இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது. கடந்த 2000&ஆம் ஆண்டு ஜனவரி 3&ந் தேதி அன்று இந்நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு (மார்க்கெட் கேப்பிட்டலிசேஷன்) ரூ.23,563.17 கோடியாக இருந்தது. இது, நடப்பு 2009&ஆம் ஆண்டு டிசம்பர் 21&ந் தேதி அன்று 14 மடங்கு அதிகரித்து ரூ3,34,097.92 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், இந்நிறுவனப் பங்குகளின் விலை ஆண்டுக்கு சராசரியாக 30 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளது.
கடந்த 2000&ஆம் ஆண்டில், இந்தியாவின் முன்னணி 10 நிறுவனங்களின் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருந்த இந்நிறுவனம், தற்போது முதலிடத்தில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இந்நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.3.10 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. இவ்வாறு பங்குகளின் விலை உன்னதமான அளவில் அதிகரிப்பதால்தான், இந்நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, உலகின் தலைசிறந்த தலைமைச் செயல் அதிகாரிகளுள், ஐந்தாவது முன்னணி தலைமைச் செயல் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தை அடுத்து, பொதுத் துறையைச் சேர்ந்த ஓ.என்.ஜி.சி. நிறுவன பங்குகளின் சந்தை மதிப்பு மொத்தம் ரூ.2.20 லட்சம் கோடி உயர்ந்துள்ளது. அதாவது, இந்நிறுவனத்தின் பங்குகளின் சந்தை மதிப்பு ரூ.30,365.26 கோடியிலிருந்து ரூ.2,51,723.91 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2000&ஆம் ஆண்டில் பங்குகளின் சந்தை மதிப்பு அடிப்படையில் ஐந்தாவது இடத்தில் இருந்த இந்நிறுவனம், தற்போது இரண்டாவது இடத்துக்கு வந்துள்ளது.
இன்போசிஸ்
இதே காலத்தில், இன்போசிஸ் நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பும் ரூ.51,844.55 கோடியிலிருந்து 177 சதவீதம் உயர்ந்து ரூ.1,43,809.51 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த 2000&ஆம் ஆண்டில், முன்னணி நிறுவனங்களின் பட்டியலில் முதல் மற்றும் இரண்டாவது இடங்களில் இருந்த விப்ரோ மற்றும் இந்துஸ்தான் யூனிலீவர் தற்போது முன்னணி 10 நிறுவனங்களின் பட்டியலில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பீ.எச்.இ.எல்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் முன்னணி 10 நிறுவனங்களின் பட்டியலில் இடம் பெறாதிருந்த, பொதுத் துறையைச் சேர்ந்த பீ.எச்.இ.எல். நிறுவனம், தற்போது இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இதற்கு, நாட்டில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளே காரணமாகும்.
கனரக மின் உற்பத்தி சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் பீ.எச்.இ.எல். நிறுவனத்தின் செயல்திறன் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. இந்நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதில் முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனை வெளிப்படுத்துகின்ற வகையில், கடந்த 2000&ஆம் ஆண்டில் ரு.5,500 கோடியாக இருந்த இந்நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு, 10 ஆண்டுகளில் 20 மடங்கு அதிகரித்து ரூ.1,12,014.41 கோடியாக உயர்ந்துள்ளது. இந்நிறுவனப் பங்குகளின் மதிப்பு ஆண்டுக்கு சராசரியாக 35 சதவீதம் அதிகரித்துள்ளது.
யூனிடெக்
இது மட்டுமின்றி, இப்பட்டியலில் இடம் பெறாத இதர நிறுவனங்களின் பங்குகளின் விலையும் பன்மடங்கு உயர்ந்துள்ளது. உதாரணமாக, ரியல் எஸ்டேட் துறையில் ஈடுபட்டு வரும் யூனிடெக் நிறுவனப் பங்குகளின் விலை கடந்த 10 ஆண்டுகளில் 240 மடங்கு உயர்ந்துள்ளது. அதாவது, 10 ஆண்டுகளுக்கு முன்னர் ரூ.1,000 முதலீடு செய்திருந்தால், இதன் மதிப்பு தற்போது ரூ.2,40,000&ஆக உயர்ந்து இருக்கும்.
இதே காலத்தில், கச்சா எண்ணெய் துரப்பணம் மற்றும் உற்பத்தி திட்டங்களில் டிரில்லிங் பணியில் ஈடுபட்டு வரும் அபான் ஆஃப்சோர் (166 மடங்குகள்), கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வரும் எரா இன்ஃப்ரா இன்ஜினீயரிங் (152 மடங்குகள்), இரும்புத்தாது ஏற்றுமதியில் இந்தியாவின் மிகப் பெரிய நிறுவனமாகத் திகழும் சேசகோவா (134 மடங்குகள்), நிலக்கரி உற்பத்தியில் ஈடுபட்டு வரும் குஜராத் என்.ஆர்.இ. கோக் (106 மடங்குகள்) மற்றும் நவபாரத் வென்ச்சர்ஸ் (103 மடங்குகள்) ஆகிய நிறுவனப் பங்குகளின் விலையும் 100 மடங்கிற்கு மேல் உயர்ந்துள்ளது.
பொருளாதார வளர்ச்சி
தற்போது நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு சுமார் ரூ.56.40 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இதுவும் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. அதேசமயம், இந்திய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து நிறுவனங்களின் பங்குகளின் சந்தை மதிப்பு ஆறு மடங்கு அதிகரித்து ரூ.57 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது, பொருளாதார வளர்ச்சியையும் விஞ்சும் வகையில் நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்து வருவதை எடுத்துக்காட்டுகிறது.

பங்கு விற்பனை மூலம் ரூ.14,000 கோடி திரட்ட அரசு திட்டம்
இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு

தேசிய கனிமவள மேம்பாட்டு கழகம்
மும்பை என்.எம்.டீ.சி. என்று சுருக்கமாக அழைக்கப்படும் தேசிய கனிமவள மேம்பாட்டு கழகம், இரும்புத் தாது உற்பத்தியில் நாட்டின் மிகப் பெரிய நிறுவனமாகும். இந்நிறுவனத்தில் மத்திய அரசு கொண்டுள்ள பங்குகளில் 8.38 சதவீதத்தை விற்பனை செய்வதன் வாயிலாக ரூ.14,000 கோடி திரட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்.எம்.டீ.சி. நிறுவனப் பங்குகள் ஏற்கனவே பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆக, இந்நிறுவனம் தற்போது இரண்டாவது பங்கு வெளியீட்டை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
நவரத்னா நிறுவனம்
என்.எம்.டீ.சி., Ôநவரத்னாÕ அந்தஸ்து பெற்ற ஒரு நிறுவனமாகும். இந்நிறுவனத்தில் மத்திய அரசு தற்போது 98.38 சதவீத பங்கு மூலதனத்தைக் கொண்டுள்ளது. எஞ்சியுள்ள 1.62 சதவீத பங்கு மூலதனம் பொதுமக்களிடம் உள்ளது. இந்நிலையில் அரசு, இரண்டாவது பங்கு வெளியீட்டின் வாயிலாக மேலும் 8.38 சதவீத பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இப்போது என்.எம்.டீ.சி. நிறுவனப் பங்கு ஒன்றின் விலை சுமார் ரூ.415 என்ற அளவில் உள்ளது.
நடப்பு ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் இருந்து இன்று வரை மத்திய அரசு மூலதனச் சந்தையில் இருந்து 180 கோடி டாலர் (சுமார் ரூ.8,400 கோடி) திரட்டிக் கொண்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில், இதுவரையிலான காலத்தில் பொதுத் துறை நிறுவனங்களான என்.எச்.பி.சி. மற்றும் ஆயில் இந்தியா ஆகியவை பங்கு வெளியீட்டை மேற்கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
ஒப்புதல்
இந்நிலையில் மத்திய அரசு, என்.டி.பி.சி., சட்லஜ் ஜால் வித்யூத் நிகம் மற்றும் ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்களின் பங்கு வெளியீட்டுக்கும் ஒப்புதல் அளித்துள்ளது. செயில், ஷிப்பிங் கார்ப்பரேஷன் மற்றும் கோல் இந்தியா ஆகிய நிறுவனங்களின் பங்குகளை வெளியிடவும் அரசு தயாராகி உள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த நிறுவனங்களின் பங்கு வெளியீடுகளும் மார்ச் 31&ந் தேதிக்கு முன்னர் நிறைவடையும் எதிர்பார்க்கப்படுகிறது.


போர்டிஸ் ஹெல்த்


விரிவாக்கத்திற்காக ரூ.250 கோடி முதலீடு


மருத்துவச் சேவையில் ஈடுபட்டு வரும் ஃபோர்டிஸ் ஹெல்த்கேர் நிறுவனம், விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக, வரும் நிதி ஆண்டிற்குள் ரூ.250 கோடி முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
கொல்கத்தாவில் 414 படுக்கைகளுடனும் பெங்களூரில் 120 படுக்கைகளுடனும் புதிதாக இரண்டு பல்துறை சிறப்பு மருத்துவமனைகளை உருவாக்குவதற்கும், மும்பையில் உள்ள மருத்துவமனையை விரிவுபடுத்துவதற்கும் இந்த முதலீடு பயன்படுத்தப்படும் என்று ஃபோர்டிஸ் ஹாஸ்பிட்டல் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விஷால்பாலி தெரிவித்தார்.
ஃபோர்டிஸ் நிறுவனம், அண்மையில் வோக்கார்டு நிறுவனத்தை வாங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்நிறுவனத்திற்கு இந்தியாவில் 39 மருத்துவமனைகளும், 5,180 படுக்கை வசதிகளும் உள்ளன.


3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் 2010 மார்ச் மாதத்திற்கு ஒத்திவைக்கப்படுகிறது
டெல்லி: 3ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம் திட்டமிட்டபடி வரும் ஜனவரி 14ம் தேதி நடக்க வாய்ப்பில்லை. 2010 பிப்ரவரி இறுதியிலோ, மார்ச் துவக்கத்திலோ தான் ஏலம் நடைபெறும் என தொலைத் தொடர்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மொபைல் பயன்படுத்துவோர் உட்பட பல்வேறு தரப்பினராலும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது 3ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஏலம். இதன்மூலம் மொபைஸ் சேவைகள் பெருகுவதுடன், வீடியோ சாட்டிங் உள்ளிட்ட 3ஜி தொழில்நுட்ப வசதிகள் பரவலாக்கப்பட்டு, போட்டிகளின் மூலம் சுலபமாக கிடைக்க வழி ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஏற்கனவே இந்த அலைவரிசைகள் வழங்கப்பட்ட பி.எஸ்.என்.எல் மற்றும் எம்.டி.என்.எல் ஆகியவை தவிர்த்து மேலும் இரண்டு நிறுவனங்களுக்கு இந்த அலைவரிசைகளை ஏலத்தில் விற்க அரசு முடிவு செய்திருந்தது. இதன்படி, மொத்தம் நான்கு ஸ்லாட்டுகளை விற்க அரசு முடிவு செய்தது.

இதன்மூலம் ரூ.25ஆயிரம் கோடி வருமானம் ஈட்டவும் திட்டமிடப்பட்டது. ஏற்கனவே 3ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளை சுட்டிக்காட்டி பாதுகாப்பு அமைச்சகம் ஏலத்துக்கு தடைபோட்டுக்கொண்டிருந்தது.

இதுதொடர்பாக அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டு பிரச்னைகள் விவாதிக்கப்பட்ட பின், ஸ்பெக்ட்ரம் ஏலத்துக்கும் சில வாரங்களுக்கு முன் பாதுகாப்பு அமைச்சம் ஒப்புதல் தந்தது.

இதையடுத்து, வரும் 2010 ஜனவரி மாதம் 14ம் தேதி 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் விடப்படும் என தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராசா அறிவித்திருந்தார்.

இந்நிலையில், ஏலம் மேலும் ஓரிரு மாதங்கள் தாமதமாகும் என தொலைத் தொடர்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு போன்ற விடுமுறை நாட்கள் குறுக்கிட்டதால், திட்டமிட்டபடி ஏலத்தில் பங்கேற்க அழைப்பு விடுக்கும் நோட்டீஸ் இன்னும் நிறுவனங்களுக்கு அனுப்பப்படவில்லை என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

எந்தெந்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது என்ற பட்டியலே இன்னும் இறுதி செய்யப்படவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பான பணிகள் ஜனவரி மாத மத்தியில் தான் முடிவடையும். அதன் பிறகு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, ஏலம் நடைபெற மார்ச் மாதமாகிவிடும் என அவர்கள் தெரிவிக்கின்றனர்.

2010 மார்ச் மாதத்தில் ஏலம் முடிவடைந்த பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் தான் நிறுவனங்களுக்கு அலைவரிசைகள் ஒரே நேரத்தில் ஒதுக்கப்படும் என தெரிகிறது.

ஏலத்திற்கான புதிய தேதி உள்ளிட்ட விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் தொலைபேசி வாடிக்கையாளர்கள் 500 மில்லியன்!
டெல்லி: இந்தியாவில் டெலிபோன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை கடந்த நவம்பர் மாதத்துடன் 500 மில்லியன் என்ற இலக்கைத் தாண்டியது.

தொலைபேசித் ஒழுங்குமுறை ஆணையத்தின் தகவல்படி நவம்பர் மாத முடிவில் 543.20 மில்லியன் மக்கள் இந்தியாவில் தொலைபேசிகளைப் பயன்படுத்துகிறார்கள்.

நவம்பர் வரை 44.87 சதவிகிதமாக இருந்த தொலைத் தொடர்பு அடர்த்தி (Teledensity), இப்போது 46.32 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

செல்போன் பயன்பாட்டைப் பொறுத்தவர் 506 மில்லியன் மக்கள் இணைப்புகளைப் பெற்றுள்ளனர். அதிக வாடிக்கையாளர் கொண்ட செல்போன் நிறுவனங்களில் இப்போதும் தனியார் நிறுவனமான ஏர்டெல்தான் முதலிடம் வகிக்கிறது. 116 மில்லியன் வாடிக்கையாளர்கள் இந்த நிறுவனத்தில் உள்ளனர்.

பிஎஸ்என்எல் இன்றும் நான்காவது இடத்திலேயே உள்ளது. அதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 60.78 மில்லியன்.

பிராட்பேண்ட் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் 7.40 மில்லியனிலிருந்து 7.67 மில்லியனாக உயர்ந்துள்ளது.