லார்சன் அண்டு டூப்ரோ அனல் மின் உற்பத்தி பிரிவில் ரூ.25,000 கோடி முதலீடு

ஞாயிறு, 24 ஜனவரி, 2010

மும்பை: நாட்டின் மிகப் பெரிய பொறியியல் துறை நிறுவனமான லார்சன் அண்டு டூப்ரோ (எல்-டி) அதன் அனல் மின் உற்பத்தி வணிகப் பிரிவில், அடுத்த ஐந்து ஆண்டுகளில் ரூ.25,000 கோடி முதலீடு மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இதனையடுத்து எல்-டியின் முழுமையான துணை நிறுவனமான எல் அண்டு டி பவர், 2015ம் ஆண்டுக்குள் 5,500 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். பல்வேறு அனல் மின் திட்டங்களுடன், சில நீர்மின் உற்பத்தி திட்டங்கள் வாயிலாக இந்த மின் உற்பத்தி இலக்கு எட்டப்படும். இமாச்சல பிரதேசம், உத்தராஞ்சல் மற்றும் ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் நீர்மின் உற்பத்தி நிலையங்களை நிறுவுவதற்கான ஆர்டரைப் பெறும் போட்டியில் ஈடுபட்டுள்ளது. எல்-டி பவர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி இது குறித்து கூறும்போது, நிறுவனம் பஞ்சாப் மாநிலம் ராஜபுராவில் மின் உற்பத்தி நிலையம் ஒன்றை அமைத்து வருகிறது. இரண்டு பிரிவுகளாக நிர்மாணிக்கப்படும் இத்திட்டம் தலா 660 மெகா வாட் திறன் கொண்டதாக இருக்கும். இதற்கான பணிகள்
தொடங்கப்பட்டு விட்டன. முதல் பிரிவு 2013ம் ஆண்டுக்குள் செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்தார். எல்-டி பவர் நிறுவனம் சென்ற ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கப்பட்டது. அப்போதிலிருந்து இந்நிறுவனம் ரூ.16,000 கோடி மதிப்பிற்கு பல்வேறு மின் திட்டங்களை

நிறைவேற்றுவதற்கான ஆர்டர்களைப் பெற்றுள்ளது. மத்திய அரசு, தனியார் பங்களிப்புடன் 4,000 மெகா வாட் திறனில் மெகா மின் உற்பத்தி திட்டங்களை நிர்மாணிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. எனவே இதற்கான ஒப்பந்தங்களைப் பெறும் முயற்சியிலும் இந்நிறுவனம் ஈடுபட உள்ளது. தற்போது முந்த்ரா (குஜராத்), சாசன் (மத்தியபிரதேசம்), கிருஷ்ணப்பட்டினம் (ஆந்திரா) திலையா (ஜார்க்கண்ட் மாநிலம்), ரோஸா (உத்தரபிரதேசம்) ஆகிய இடங்களில் தலா 4,000 மெகா வாட் திறனில் மெகா மின் உற்பத்தி திட்டங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசு இது போன்ற மேலும் ஐந்து திட்டங்களை நிர்மாணிக்கும் வகையில் சில பகுதிகளை அடையாளம் கண்டுள்ளது. இதற்கான ஒப்பந்தங்கள் போட்டி அடிப்படையில் ஏலப்புள்ளி மூலம் தனியார் நிறுவனங்களுக்கு அளிக்கப்படும்.


ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிகர லாபம் ரூ.4,008 கோடி

தனியார் துறையை சேர்ந்த, முகேஷ் அம்பானி தலைமையின் கீழ் செயல்பட்டு வரும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், சென்ற டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த மூன்றாவது காலாண்டில் ரூ.4,008 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற ஆண்டின் மூன்றாவது காலாண்டை விட 14.48 சதவீதம் (ரூ.3,501 கோடி) அதிகமாகும். இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் தனிப்பட்ட நிகர விற்பனை ரூ.31,563 கோடியிலிருந்து ரூ.56,856 கோடியாக வளர்ச்சி அடைந்துள்ளது.
கணக்கீடு செய்வதற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட காலாண்டில், இந்நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு லாப வரம்பு அதிகரித்ததன் காரணமாகவே இதன் நிகர லாபம் உயர்ந்துள்ளது. மூன்றாவது காலாண்டில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பெட்ரோரசாயன பொருள்கள் வர்த்தகம், முந்தைய ஆண்டின் மூன்றாவது காலாண்டை விட 17 சதவீதம் அதிகரித்து ரூ.14,756 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது.சில ஆய்வு நிறுவனங்கள், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், சென்ற மூன்றாவது காலாண்டில் ரூ.52,297 கோடி விற்பனையில் ரூ.3,912 கோடியை நிகர லாபமாக ஈட்டும் என மதிப்பீடு செய்திருந்தன. ஆனால், சந்தை மதிப்பீட்டையும் விஞ்சி ரிலையன்ஸ் நிறுவனம் சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


குறைந்த விலை ஷாப்பிங் : 'பிக் பஜார்' அறிவிப்பு
சென்னை: இந்த ஆண்டின் மிக மிகக் குறைந்த விலையில், நான்கு நாள் ஷாப்பிங் திருவிழாவை, 'பிக் பஜார்' அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்தி: இந்தியாவில், 70 நகரங்களில் அமைந்துள்ள பிக் பஜாரின் 120 கிளைகளில், இன்று முதல் வரும் 26ம் தேதி வரை, நான்கு நாட்கள், இந்த ஷாப்பிங் திருவிழா நடைபெறுகிறது. இந்திய நுகர்வோருக்கு மனநிறைவான சிறந்த ஷாப்பிங் அனுபவத்தை வழங்க வேண்டும் என்ற தொடர் முயற்சியின் விளைவாக, இது போன்ற திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. பிக் பஜார், புட் பஜார் தவிர பியூச்சர் குழுமத்தின்,இதர சில்லறை விற்பனை நிறுவனங்களான பர்னிச்சர் பஜார், எலக்ட்ரானிக் பஜார், ஹோம் பஜார் உள்ளிட்டவையும், இந்த மாபெரும் திருவிழாவில் இடம் பெறும்.
ஆண்கள் மற்றும் பெண்களுக்கான டி சர்ட்டுகள் இரண்டு வாங்கினால், இரண்டு இலவசம், ஜீன்ஸ் ஒன்று வாங்கினால், ஒன்று இலவசம், சல்வார் கம்மீஸ் துப்பட்டா செட் பல்வேறு ரகங்களில் 50 சதவீதம் தள்ளுபடியில் கிடைக்கும்.நோக்கியா, சோனி எரிக்சன், சாம்சங் மொபைல் போன் ஆகியவை 25 சதவீதம் தள்ளுபடி விலையில் கிடைக்கும். ஆனால், தேர்ந்தெடுக்கப்பட்ட மாடல்களுக்கு மட்டுமே, இந்த

சலுகைகள் பொருந்தும். இதை தவிர, இன்னும் ஏராளமான பொருட்களுக்கு, பல சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை, பிக் பஜார் வழங்குகிறது. இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது

டெனிம் பேன்ட் விலை அதிகரிக்கும்
அமதாபாத்: காட்டன் விலை மற்றும் பாலியஸ்டர் விலை ஏற்றத்தின் காரணமாக துணி விலை, மீட்டருக்கு 5 முதல் 6 ரூபாய் வரை உயர்ந்துள்ளது; டெனிம் பேன்ட் விலை அதிகரிக்கும். இந்தியாவில் குஜராத் மாநிலம் தான் துணி உற்பத்தியில் முதன்மை பெற்று விளங்குகிறது. இது நூற்பாலைகள் செரிந்த மாநிலமாகும். அரவிந்த் மில்ஸ், ஆர்வி டெனிம்ஸ், அஸீம்மா, நந்தன் எக்ஸீம், ஜிந்தால் வேர்ல்டு ஒய்டு போன்ற பிரசித்தி பெற்ற, பெரிய ஆலைகள் உள்ளன. ஆண்டுக்கு 25 கோடியில் இருந்து 30 கோடி மீட்டர் துணி உற்பத்தி செய்யப்படுகிறது. காட்டன் விலை, பாலியஸ்டர் விலை உயர்ந்ததன் காரணமாக, ஆலை உரிமையாளர்கள் தாங்கள் உற்பத்தி செய்யும் துணியின் விலையை, ஒரு மீட்டருக்கு 5 ரூபாய் உயர்த்தியுள்ளனர். கடந்த மாதம் முதல் இந்த விலை அமலில் உள்ளது. வரும் மார்ச் மாதத்தில், விலை மேலும் 3 முதல் 4 சதவீதம் வரை உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்வி டெனிம் ஆலையின் இயக்குனர் ஆஷிஸ் வி ஷா கூறுகையில், 'எங்கள் ஆலையில் ஆண்டுக்கு 6 கோடி மீட்டர் வரை துணி உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், 20 முதல் 25 சதவீதம் வரை ஏற்றுமதி செய்கிறோம். பணப் புழக்கத்துக்கு தகுந்தாற் போல் ஏற்றுமதியை கூட்டியும் குறைத்தும் மேற்கொண்டு வருகிறோம். ஒரு மாதத்துக்கு முன்னர் ஒரு மீட்டர் துணி 87 ரூபாயாக இருந்ததை, 92 ஆக உயர்த்தி உள்ளோம். காட்டன் விலை, பாலியஸ்டர் விலை ஏற்றம் காரணமாக, இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாததாகி விட்டது என்றார் ஷா.

சென்ற 2009&ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில்


முக்கிய 6 துறைகளின் உற்பத்தி எட்டு மடங்கிற்கு மேல் அதிகரிப்பு

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
சென்ற 2009&ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், முக்கிய 6 துறைகளின் உற்பத்தி, கடந்த 2008&ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தைக் காட்டிலும் எட்டு மடங்கிற்கு மேல் அதிகரித்துள்ளது. இது, நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்டு வரும் முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகிறது.
அடிப்படை கட்டமைப்பு வசதி
உருக்கு, சிமெண்டு, மின்சாரம், நிலக்கரி, கச்சா எண்ணெய், பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆகிய ஆறு அடிப்படை கட்டமைப்பு வசதி துறைகளின் உற்பத்தி கடந்த 2008&ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் 0.7 சதவீதம் உயர்ந்து இருந்தது. இது, சென்ற டிசம்பர் மாதத்தில், 8 மடங்கிற்கு மேல் அதிகரித்து 6 சதவீதமாக உயர்ந்துள்ளது. முந்தைய நவம்பர் மாத வளர்ச்சியுடன் (5.3 சதவீதம்) ஒப்பிடும்போதும் இது அதிகமானதாகும்.
நடப்பு நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களிலும் இத்துறைகளின் உற்பத்தி 4.8 சதவீதமாக வளர்ச்சி அடைந்துள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் 3.2 சதவீதமாக இருந்தது. ஆக, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆணிவேராகத் திகழும் ஆறு முக்கிய துறைகளின் உற்பத்தியில் எழுச்சி ஏற்படத் தொடங்கி உள்ளது என்று கூறலாம்.
தொழில்துறை
நாட்டின் தொழில்துறை உற்பத்தியில் இந்த துறைகளின் பங்களிப்பு 26.7 சதவீதமாக உள்ளது. சென்ற நவம்பர் மாதத்தில் நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 11 சதவீதமாக உயர்ந்து இருந்தது. இந்நிலையில், சென்ற டிசம்பர் மாதத்தில் இந்த முக்கிய துறைகளின் உற்பத்தியில் எதிர்பார்ப்புகளையும் விஞ்சி வளர்ச்சி ஏற்பட்டுள்ளதால், டிசம்பர் மாதத்தில் நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி 12 சதவீதத்தை எட்ட வாய்ப்புள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வேளாண் உற்பத்தி
பருவமழை எதிர்பார்த்த அளவிற்கு பெய்யாததால், உள்நாட்டில் வேளாண் உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில், தொழில் துறையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனையடுத்து, சென்ற டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை எடுத்துக்காட்டும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முந்தைய காலாண்டைப் போன்று உத்வேகம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்ற டிசம்பர் மாதத்தில் முக்கிய ஆறு துறைகளின் உற்பத்தி வளர்ச்சியில் சிமெண்டு துறை முதலிடத்தில் உள்ளது. இத்துறையின் உற்பத்தி 11 சதவீதம் அதிகரித்து 1.81 கோடி டன்னாக உயர்ந்துள்ளது. சென்ற நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் நாட்டின் சிமெண்டு உற்பத்தி 13.52 கோடி டன்னாக இருந்தது. இது, நடப்பு நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களிலும் 11 சதவீதம் அதிகரித்து 15.01 கோடி டன்னாக உயர்ந்துள்ளது.
சிமெண்டிற்கு அடுத்தபடியாக உருக்கு உற்பத்தியில் நல்ல அளவில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. சென்ற டிசம்பர் மாதத்தில் இதன் உற்பத்தி 9.6 சதவீதம் அதிகரித்து 46.40 லட்சம் டன்னிலிருந்து 50.85 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களிலும் உருக்கு உற்பத்தி 4.03 கோடி டன்னிலிருந்து 4.17 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
வீட்டு வசதி
இது குறித்து இந்திய கனிம தொழிற்சாலைகள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஆர்.கே.சர்மா கூறும்போது, Òவீட்டு வசதி மேம்பாடு மற்றும் சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு வசதிகளை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இதனையடுத்து, கட்டுமானப் பணிகளில் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளதால், உருக்கு மற்றும் சிமெண்டு விற்பனை அதிகரித்து வருகிறது. இதனால், இத்துறைகளின் உற்பத்தியில் வியத்தகு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதுÓ என்று தெரிவித்தார்.
மின்சாரம்
சென்ற டிசம்பர் மாதத்தில், அனைத்து துறைகளின் வளர்ச்சிக்கும் ஆதாரமாகத் திகழும் மின் துறையின் உற்பத்தி 5.4 சதவீதம் உயர்ந்து 6,341.70 கோடி யூனிட்டாக உயர்ந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மின் உற்பத்தி 6 சதவீதம் அதிகரித்து 53,995.40 கோடி யூனிட்டுகளிலிருந்து 57,252.20 கோடி யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது.
சென்ற டிசம்பர் மாதத்தில் நிலக்கரி உற்பத்தி 5.4 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே மாதத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி 1.1 சதவீதம் உயர்ந்து 29.05 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது. இதன்படி, நாள் ஒன்றுக்கான உற்பத்தி திறன் 6,86,800 பீப்பாய்கள் ஆகும். கடந்த ஆறு மாதங்களில் டிசம்பர் மாதத்தில்தான் கச்சா எண்ணெய் உற்பத்தியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தி உயர்ந்துள்ள நிலையிலும், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட பெட்ரோலிய பொருள்கள் உற்பத்தியில் 0.9 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எச்.டீ.எப்.சி. நிறுவனம்


நிகர லாபம் ரூ.671 கோடி

இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
மும்பை
வீட்டு வசதி கடன் வழங்கி வரும் ஹவுசிங் டெவலப்மெண்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (எச்.டீ.எஃப்.சி) நிறுவனம், சென்ற டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.671.25 கோடியை தனிப்பட்ட நிகர லாபமாக பெற்றுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.546.83 கோடியாக இருந்தது.
இதே காலாண்டுகளில், இந்நிறுவனத்தின் நிகர விற்பனை ரூ.2,827.97 கோடியிலிருந்து ரூ.2,705.57 கோடியாக குறைந்துள்ளது.

யெஸ் பேங்க்


நிகர லாபம் ரூ.126 கோடி


இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
மும்பை
தனியார் துறையைச் சேர்ந்த யெஸ் பேங்க், சென்ற டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் ரூ.125.93 கோடியை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.105.79 கோடியாக இருந்தது.
இதே காலாண்டுகளில், இவ்வங்கியின் வட்டி வருவாய் ரூ.532.68 கோடியிலிருந்து ரூ.626.36 கோடியாக வளர்ச்சி கண்டுள்ளது. வங்கியின் வட்டிச் செலவினம் ரூ.412.27 கோடியிலிருந்து ரூ.415.44 கோடியாக சற்று உயர்ந்துள்ளது.


இந்திய செல்போன் சேவை துறை


டிசம்பர் மாதத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை உயர்வு



இக்கனாமிக் டைம்ஸ் செய்தி பிரிவு
புதுடெல்லி
செல்போன் சேவையைப் புதிதாக பெறும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சென்ற டிசம்பர் மாதத்திலும் புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை சிறப்பான அளவில் அதிகரித்துள்ளது. டிசம்பர் மாதத்திலும், அதிக எண்ணிக்கையில் புதிய இணைப்புகள் வழங்கியதில் டாட்டா டெலிசர்வீசஸ் நிறுவனம் முதலிடத்தில் உள்ளது.
டாட்டா டெலிசர்வீசஸ்
டாட்டா டெலிசர்வீசஸ் நிறுவனம், டிசம்பர் மாதத்தில் மட்டும் 33 லட்சத்துக்கும் அதிகமான அளவில் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. புதிய வாடிக்கையாளர்களை அதிக அளவில் ஈர்ப்பதில் இந்நிறுவனம் தொடர்ந்து ஐந்தாவது மாதமாக முதலிடத்தில் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களின் மொத்த எண்ணிக்கை 5.70 கோடியை தாண்டி உள்ளது.
இதனையடுத்து பொதுத் துறையைச் சேர்ந்த பீ.எஸ்.என்.எல். நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி, செல்போன் சேவையில் ஐந்தாவது பெரிய நிறுவனமாக டாட்டா டெலிசர்வீசஸ் உருவெடுத்துள்ளது. இதற்கு முன்பாக, ஐடியா செல்லுலார் நிறுவனம் பீ.எஸ்.என்.எல்&ஐ ஐந்தாவது இடத்துக்கு தள்ளி நான்காவது இடத்துக்கு முன்னேறியது.
இரண்டு தொழில்நுட்பங்கள்
டாட்டா டெலிசர்வீசஸ் நிறுவனம் ஜி.எஸ்.எம். மற்றும் சி.டீ.எம்.ஏ. ஆகிய இரண்டு தொழில்நுட்பங்களிலும் செல்போன் சேவை வழங்குகிறது. டாட்டா இண்டிகாம் பிராண்டில் சி.டீ.எம்.ஏ. சேவையும், டாட்டா டோகோமோ பிராண்டின் கீழ் ஜி.எஸ்.எம். சேவையும் அளித்து வருகிறது. ஒரு நொடிக்கு ஒரு காசு என்ற புரட்சித் திட்டத்தை முதன் முதலில் அறிமுகம் செய்த இந்நிறுவனம் இதர நிறுவனங்களை விஞ்சிடும் வகையில் புதிய வாடிக்கையாளர்களை ஈர்த்து வருகிறது.
பார்தி ஏர்டெல்
இந்திய செல்போன் சேவைத் துறையில் முதல் இடத்தில் இருந்து வரும் பார்தி ஏர்டெல், சென்ற டிசம்பர் மாதத்தில் 28 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை இணைத்துள்ளது. தற்போது இந்நிறுவனம் மொத்தம் 11.90 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. டிசம்பர் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் 84 லட்சம் புதிய இணைப்புகளை இந்நிறுவனம் வழங்கியுள்ளது.
செல்போன் சேவையில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது. வோடாஃபோன் எஸ்ஸார் மூன்றாவது இடத்திலும், ஐடியா செல்லுலார் நான்காவது இடத்திலும் உள்ளன. டாட்டா டெலிசர்வீசஸ் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. பீ.எஸ்.என்.எல். ஆறாவது இடத்துக்குச் சென்றுள்ளது.

அக்டோபர் & டிசம்பர் மாத காலத்தில்


2 சிமெண்டு நிறுவனங்களின் நிகர லாபம் சரிவடைந்தது

மிதுன் ராய்
மும்பை
நடப்பு நிதி ஆண்டின் மூன்றாவது காலாண்டில் (அக்டோபர்&டிசம்பர்), இரண்டு முன்னணி சிமெண்டு நிறுவனங்களின் நிகர லாபம் சரிவடைந்துள்ளது. உற்பத்தி அதிகரித்து வரும் நிலையில் தேவைப்பாடு குறைந்துள்ளதும், சிமெண்டு விலை சரிந்துள்ளதுமே இதற்கு முக்கிய காரணமாகும்.
அல்ட்ராடெக் சிமெண்ட்
அல்ட்ராடெக் சிமெண்ட், உற்பத்தி திறன் அடிப்படையில், நாட்டின் இரண்டாவது பெரிய சிமெண்டு நிறுவனமாகும். இந்நிறுவனம் அண்மையில் மூன்றாவது காலாண்டுக்கான நிதி நிலை முடிவுகளை வெளியிட்டது. நிறுவனத்தின் நிகர லாபம் 18 சதவீதம் குறைந்துள்ளது. இதே போன்று, இக்காலாண்டில் டெல்லியைச் சேர்ந்த ஜே.கே. லட்சுமி சிமெண்ட் நிறுவனத்தின் நிகர லாபம் 19 சதவீதம் சரிவடைந்துள்ளது.
இந்நிலையில் மெட்ராஸ் சிமெண்ட்ஸ், டால்மியா சிமெண்ட்ஸ், ஏ.சி.சி., அம்புஜா சிமெண்ட்ஸ் உள்ளிட்ட இதர நிறுவனங்களின் லாப வரம்பும் சரிவடையும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ஸ்ரீசிமெண்ட் நிறுவனத்தின் நிகர லாபம், மூன்றாவது காலாண்டில 35 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. அக்டோபர்&டிசம்பர் மாத காலத்தில் இந்நிறுவனம் ரூ.167 கோடியை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, சென்ற நிதி ஆண்டின் இதே காலாண்டில் ரூ.124 கோடியாக இருந்தது. இதே காலத்தில் இந்நிறுவனத்தின் சிமெண்டு விற்பனை 30 சதவீதம் உயர்ந்து, ரூ.664 கோடியிலிருந்து ரூ.866 கோடியாக அதிகரித்துள்ளது.
எதிர்கால வளர்ச்சி
இது குறித்து இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எச்.எம்.பாங்கூர் கூறும்போது, Òசிமெண்டு விலையில் ஏற்றத் தாழ்வுகள் நிலவி வருவதால் எதிர்கால வளர்ச்சி குறித்து முன்னறிவிப்பு செய்வது கடினமாக உள்ளது. சிமெண்டு விலையை அதிகரிக்க இயலவில்லை என்றால் இத்துறை நிறுவனங்களின் லாப வரம்பு பாதிக்கப்படும்Ó என்று தெரிவித்தார்.
மெட்ராஸ் சிமெண்ட், டால்மியா சிமெண்ட்ஸ் ஆகிய நிறுவனங்கள் இம்மாதம் 28&ந் தேதியன்று மூன்றாவது காலாண்டிற்கான நிதி நிலை முடிவுகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.சி.சி. மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகியவை பிப்ரவரி 4&ந் தேதியன்று நிதி நிலை முடிவுகளை வெளியிடும் என தெரிகிறது.
உற்பத்தி திறன்
தற்போது நம் நாட்டில் 70&க்கும் அதிகமான அளவில் சிமெண்டு நிறுவனங்கள் உள்ளன. சர்வதேச அளவில் சீனாவிற்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் சிமெண்டு துறை அதிவேக வளர்ச்சி கண்டு வருகிறது. நடப்பு நிதி ஆண்டின் இறுதிக்குள் உள்நாட்டு நிறுவனங்களின் சிமெண்டு உற்பத்தித் திறன் ஆறு கோடி டன் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளில் நிறுவனங்கள் விரிவாக்கத்துக்காக ரூ.50,000 கோடி முதலீடு மேற்கொள்ள உள்ளன. அப்போது நாட்டின் சிமெண்டு உற்பத்தி திறன் மேலும் 11 கோடி டன் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் தேவைப்பாட்டை விஞ்சி அளிப்பு உயரும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

15 மாதங்களில் முதல் முறையாக லாபம் கண்ட ரிலையன்ஸ்!
மும்பை: கிட்டத்தட்ட 5 காலாண்டுகள் தொடர்ந்து நஷ்டத்தைச் சந்தித்து வந்த ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் முதல் முறையாக இந்த காலாண்டில் லாபம் பார்த்துள்ளது.

அக்டோபர் - டிசம்பர் காலகட்டத்தில் ரிலையன்ஸுக்கு 16 சதவிகித லாபம் அதாவது ரூ 4008 கோடி கிடைத்துள்ளது.

கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ 3,462 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் மொத்த உற்பத்தி இந்த 3 மாதங்களில் மட்டும் 93 சதவிகிதம் உயர்ந்து ரூ 58,848 கோடியாக உள்ளது. ரிலையன்ஸ் பங்குகள் மூலம் கிடைத்த வருவாய் இதில் சேர்க்கப்படவில்லை.

ஆனால் கடந்த மூன்று காலாண்டுகளிலும் சேர்த்து அதாவது 9 மாதங்களின் நிகர லாபம் என்று பார்த்தால் அதில் லேசான வீழ்ச்சியையே காட்டுகிறது. கடந்த நிதியாண்டில் 9 மாதங்களில் ரூ 11682 கோடியாக இருந்த நிகர லாபம், இந்த ஆண்டு 11526 கோடியாக குறைந்துள்ளது.

எண்ணெய் சுத்திகரிப்பு மூலம் இந்த நிறுவனத்துக்கு கிடைத்த வரும் வருவாய் இந்த காலாண்டில் கணிசமாக உயர்ந்துள்ளது.

உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக உயர்ந்த சீனா!
பெய்ஜிங்: 8.7 சதவீத அபார வளர்ச்சியுடன் உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் என்ற அந்தஸ்தை எட்டியுள்ளது கம்யூனிஸ்ட் சீனா.

இதுவரை அந்த நிலையிலிருந்த ஜப்பான் இப்போது மூன்றாமிடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஜனவரி 21ம் தேதி சீனா வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, அந்நாடு 33.5 ட்ரில்லியன் யான் (யான் என்பது சீன கரன்ஸி. டாலரில் 4.9 ட்ரில்லியன்) அளவு மொத்த உற்பத்தியை எட்டியுள்ளது.

இந்த மூன்றாவது காலாண்டில் மட்டும் 10.7 சதவிகிதம் அளவு சீனாவின் மொத்த உற்பத்தி GDP வளர்ச்சி கண்டுள்ளது. உலகில் இந்த காலகட்டத்தில் எந்த நாட்டுப் பொருளாதாரமுமே இரட்டை இலக்க வளர்ச்சியைத் தொட முடியாத நிலையில் சீனா இதைச் சாதித்திருப்பது முக்கியமானது. ஜப்பான் 6 சதவிகித வளர்ச்சியையே பெற்றுள்ளது.

அமெரிக்காவோ 2 சதவிகித வளர்ச்சியைத்தான் பெற்றுள்ளது. நிலைமை இப்படியே போனால் தனது முதலிடத்துக்கே ஆபத்து வந்துவிடும் சூழல் உள்ளதால் கைபிசைந்து நிற்கிறது அமெரிக்கா.

சன் டிவி லாபம் 35 சதவீதம் உயர்வு!
சென்னை: மீடியா உலகில் முன்னணி வகிக்கும் சன் டிவி நெட்வொர்க்கின் மூன்றாம் காலாண்டு லாபம் 35 சதவீதம் உயர்ந்துள்ளது.

கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் சன் டிவியின் நிகர லாபம் ரூ.112.2 கோடியாக இருந்தது. ஆனால் இப்போது அது அது ரூ. 151.9 கோடியாக உயர்ந்துள்ளது.

நிறுவனத்தின் மொத்த வருமானம் 45.88 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.270.8 கோடியாக இருந்த வருவாய் ரூ 395.1 கோடியாக உயர்ந்துள்ளது.

இந்த ஆண்டில் முதல் மூன்று காலாண்டிலும் சேர்த்து நிகர லாபம் ரூ.402.3 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இது ரூ.323 கோடியாக இருந்தது.

பங்கு விற்பனை மூலம் இந்த நிறுவனம் திரட்டிய ரூ.572 கோடியில், ரூ 8.73 கோடி, புதிய சேனல்கள் துவங்க ஒதுக்கப்பட்டுள்ளது. கார்ப்பரேட் அலுவலகங்கள் அமைக்க மட்டுமே ரூ.62.3 கோடி செலவிடப்பட்டுள்ளது.

சன் டிவி நெட்வொர்க் ஐரோப்பா லிமிடெட் என்ற புதிய துணை நிறுவனம் ஒன்றும் துவங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் மூலம் பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவில் சன் டிவி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்படும்.

டிடிஎச், ஐபிடிவி, எச்ஐடிஎஸ் மற்றும் எம்எம்டிஎஸ் போன்ற தொழில் நுட்பத்தை விநியோகிக்கும் வர்த்தகத்தில் பல புதிய மாறுதல்களைச் செய்யவும் சன் திட்டமிட்டுள்ளது.

விளம்பர கட்டணம் உயர்வு:

தனது தெலுங்கு மற்றும் கன்னட சேனல்களின் விளம்பரக் கட்டண விகிதங்களை 6 முதல் 16 சதவீதம் வரை உயர்த்துவதாகவும் அறிவித்துள்ளது சன். மலையாள சேனல்களில் 10 சதவீகித கட்டண உயர்வு இருக்குமாம்.

கேடிவி, சன் டிவி, சன் நியூஸ், ஆதித்யா, சுட்டி மற்றும் சன் மியூசிக் போன்றவற்றில் 9 முதல் 33 சதவீதம் வரை கட்டண உயர்வை அறிவித்துள்ளது சன்.

14 போலி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள்! - ஆசாத் தகவல்

டெல்லி:​ நாடு முழுக்க 14 போலி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் குறித்த தகவல்கள் கிடைத்திருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

போலி மருந்​து​கள் தயா​ரிக்​கும் நிறு​வ​னங்​கள் குறித்து தக​வல் தரும் நபர்​க​ளுக்கு ரூ.25 லட்​சம் வரை பரி​ச​ளிக்​கப்​ப​டும் என்று மத்​திய அரசு சமீபத்தில் அறிவித்தது.

இந்த அறிவிப்பு வெளியான பிறகு, இது​வரை 14 போலி நிறு​வ​னங்​கள் பற்​றிய தகவல்களை பல்வேறு தரப்பினர் தெரிவித்துள்ளதாக, டெல்லியில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஆசாத் குறிப்பிட்டார்.

இந்த 14 போலி மருந்து தயா​ரிப்பு நிறு​வ​னங்​க​ளி​லும் சோதனை நடத்தி,​​ அவை தயா​ரிக்​கும் போலி மருந்​து​களை பறி​மு​தல் செய்​ய​வும் அவர்​க​ளைக் கைது செய்​ய​வும் நட​வ​டிக்​கை​கள் எடுக்​கப்​பட்​டுள்​ளதாகவும் அவர் கூறினார்.

இந்​தப் போலி நிறு​வ​னங்​கள் எந்​தெந்த மாநி​லங்​க​ளில் செயல்​ப​டு​கின்​றன என்​பதை இப்போதைக்கு தெரிவிக்க முடியாது என்று கூறிவிட்ட அமைச்சர், "ஆய்வின் முடிவில் குறிப்பிட்ட நிறுவனத்தின் மருந்துகள் போலி என்பது உறுதி செய்யப்பட்டால், அந்த நிறு​வ​னத்​தின் உரி​மை​யா​ளர்​க​ளுக்கு அதி​க​பட்​சம் ஆயுள் ​தண்​டனை வழங்க சட்​டத்​தில் இடம் இருக்​கி​றது" என்​றார்.​

பொதுத்துறை மருந்து நிறுவனங்களின் உரிமம் ரத்து...

ஆசாத் மேலும் கூறுகையில், "தடுப்பு மருந்​து​கள் தயா​ரித்து வந்த பொதுத் ​துறை நிறு​வ​னங்​க​ளான சென்னை​​ கிண்​டி​யில் உள்ள பி.சி.ஜி.​ வாக்​ஸின் நிறு​வ​னம்,​​ குன்​னூ​ரில் உள்ள பாஸ்​டர் இந்​தியா நிறுவனம்,​​ கசோ​லி​யில் உள்ள மத்​திய ஆய்வு நிறு​வ​னம் இவை மூன்​றும் தர​மான உற்​பத்தி முறை​க​ளைக் கையா​ள​வில்லை என்ற கார​ணத்​தால் அவற்​றின் உரி​மம் தற்காலிகமாக ரத்து செய்​யப்​பட்​டுள்ளது.​

எனினும் குறைபாடுகளைக் களைந்து இந்த மூன்று நிறு​வ​னங்​க​ளை​யும் மீண்​டும் செயல்​பட வைக்​கும் பணி​யில் சுகா​தா​ரத் துறை ஈடு​பட்​டுள்​ளது.​ ​
கிண்டி பிசிஜி வாக்​ஸின் நிறு​வ​னத்​தைப் பொருத்​த​வரை,​​ இதனை ஏன் மூடி​னார்​கள் என்று கண்​ட​றிய அமைக்​கப்​பட்ட ஜாவீத் சவுத்ரி கமிட்​டி​யின் அறிக்கை கிடைத்ததும் இது மீண்​டும் திறக்​கப்​ப​டும்" என்​றார்.