வெள்ளி, 18 டிசம்பர், 2009

இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவில் முடிந்தது
மும்பை : வர்த்தக நேர முடிவின் போது இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகம் சரிவில் இருந்தது. வாரத்தின் 4வது வர்த்தக தினமான இன்று, காலையில் இந்திய பங்குச்சந்தையில் வர்த்தகம் இறங்குமுகத்தில் காணப்பட்டது. காலை 10.10 மணியளவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் 41.78 புள்ளிகள் சரிந்து16870.99 புள்ளிகளாக இருந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 12.35 புள்ளிகள் குறைந்து 5029.70 புள்ளிகளாக இருந்தது. பிற்பகலில் ஏற்ற இறக்கத்துடன் இருந்த பங்குச்சந்தை வர்த்தக நேர முடிவில் குறைந்தே முடிந்தது. சென்செக்ஸ் 18.52 புள்ளிகள் சரிந்து 16,894.25 ஆக இருந்தது. நிப்டி 0.30 புள்ளிகள் சரிந்து 5041.75 புள்ளிகளில் முடிந்திருக்கிறது

சீனாவில் 255 டன் தங்கம் உற்பத்தி
பெய்ஜிங்: உலக அளவில் தங்கம் பயன்பாட்டில், இது வரை இந்தியா முதலிடத்தில் இருந்து வந்தது. தற்போது, சீன நாட்டில் தங்கம் பயன்பாடு அதிகரித்துள்ளதையடுத்து, சீனா முதலிடத்தை பிடித்துள்ளது. சர்வதேச அளவில், மிக அதிக அளவில் தங்கம் உற்பத்தி செய்யும் நாடுகளுள் சீனா முன்னணியில் உள்ளது. சென்ற அக்டோபர் மாதத்தில், சீனாவில் 26.354 டன் தங்கம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தொழில் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும், நடப்பு 2009ம் ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான 10 மாதத்தில் சீனாவில் 254.552 டன் தங்கம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது, சென்ற ஆண்டை விட 14.1 சதவீதம் அதிகம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். பல நாடுகளின் செலாவணிகளுக்கு எதிராக, அமெரிக்க டாலரின் வெளிமதிப்பு சரிவடைந்து போனதால், உலக அளவில் தங்கத்தில் முதலீடு செய்வது அதிகரித்தது. இதனால், கடந்த ஒரு சில மாதங்களாக இந்தியாவில் மட்டுமின்றி, சர்வதேச அளவிலும் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவிற்கு அதிகரித்தது. டிசம்பர் 3ம் தேதியன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் ரூ.1,707 ஆக உயர்ந்தது. அதாவது, ஒரு பவுன் (8 கிராம்) விலை ரூ.12,792 ஆக அதிகரித்தது. இந்தநிலையில், புதன்கிழமை அன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.1,599 ஆக இருந்தது. இந்தியாவில், தங்கத்தின் விலை அதிகளவில் உயர்ந்ததையடுத்து, தங்கம் பயன்பாடு குறைந்து போனது.

வங்கதேச செல்போன் நிறுவனத்தை வாங்கிறது பாரதி ஏர்டெல்!
மும்பை: வங்கதேசத்தின் நான்காவது பெரிய செல்போன் நிறுவனமான வாரிட் டெலிகாமை வாங்குகிறது இந்தியாவின் பாரதி ஏர்டெல். அபுதாபியைச் சேர்ந்த தாபி நிறுவனத்துக்குச் சொந்தமானது இந்த வாரிட் மொபைல். இந்த நிறுவனத்தை வாங்குவதன் மூலம் வங்கதேச மொபைல் போன் மார்க்கெட்டில் நுழைகிறது பாரதி ஏர்டெல்.
வாரிட் டெலிகாமின் 70 சதவிகித பங்குகளை பாரதிக்கு விற்க சம்மதித்துவிட்ட தாபி நிறுவனம், இதற்கு முறைப்படி வங்கதேச தொலைத் தொடர்பு கட்டுப்பாட்டு வாரியத்திடம் அனுமதி கோரியுள்ளது.

கிட்டத்தட்ட 300 மில்லியன் டாலர்களை ஆரம்பத்தில் முதலீடு செய்யும் பாரதி, படிப்படியாக 900 மில்லியன் டாலர் வரை வங்கதேசத்தில் முதலீடு செய்யும் திட்டத்தில் உள்ளது. வாரிட் நிறுவனம் 2007ல் வங்கதேசத்தில் கால்பதித்தது. குறுகிய காலத்திலேயே வேகமாக அந்நாட்டின் பெரிய செல்போன் நிறுவனமாக வளர்ந்துள்ளது. பாரதி நிறுவனம் தங்கள் நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை வாங்குவது, வங்கதேச தொலைத் தொடர்புத் துறையில் பெரும் புரட்சியை நிகழ்த்தும் என்று இந்நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.

வங்கதேசத்தில் தற்போது 52 மில்லியன் செல்போன் வாடிக்கையாளர்கள் உள்ளனர்.





10 ஆண்டுகளில் இல்லாத விலை உயர்வு: பொருட்களை இறக்குமதி செய்ய முடிவு

புதுடில்லி: 'கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் உணவுப் பொருட்கள் பணவீக்கம் அதிகளவாக உயர்ந்துள்ளது. ஆகவே, நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் வினியோகத்தை அதிகரிக்க, அவற்றை அரசு இறக்குமதி செய்ய தீர்மானித்துள்ளது' என, மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார். இதனிடையே, நிதித்துறையின் பார்லிமென்ட் நிலைக்குழு, பணவீக்கம் தொடர்பான தன் அறிக்கையில் சில குறைபாடுகளை வெளிப்படுத்தியிருக்கிறது.

அதன் விவரம்: பொருட்கள் பதுக்கலைத் தடுக்க, அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். பொருட்களின் விலை உயர்வு விவகாரத்தில், சரியான நேரத்தில் தலையிட்டு அவற்றை தீவிரமாக கட்டுப்படுத்த அரசு தவறிவிட்டது. உணவுப் பொருட்கள் பணவீக்கத்தால், கோதுமை, பருப்புகள், அரிசி, சர்க்கரை மற்றும் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. சென்ற மாதம் உணவுப் பொருட்கள் பணவீக்கம், கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவாக 19.05 சதவீதத்திற்கு உயர்ந்தது. எனவே, இந்த விலையேற்றத்தில் இருந்து மக்களைக் காப்பாற்ற, விரிவான உணவுப் பொருட் கள் விலை மேலாண்மை கொள்கையை அரசு உருவாக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

இதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், 'உணவுப் பொருட்கள் விலை அதிகரித்து வருகிறது; இது கவலையளிக்கும் விவகாரம். இறக்குமதி மூலம் உணவுப் பொருட்கள் வினியோகத்தை அதிகரித்து, அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில், அரசு தீவிர கவனம் செலுத்தி வருகிறது' என்றார். முன்னதாக நேற்று காலை வெளியிடப்பட்ட தகவல்படி, உணவுப் பொருட்கள் பணவீக்கம் 19.95 சதவீதமாக இருந்தது. பணவீக்கம் அதிகரிப்பு மற்றும் மொத்த வளர்ச்சியை உன்னிப்பாக கவனித்து வரும் இந்திய ரிசர்வ் வங்கி, அடுத்த மாதம் வெளியிடும் நிதிக் கொள்கை மறு ஆய்வில், வட்டி வீதங்களை மாற்றியமைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

யூனிநார் அலுவலகம் சென்னையில் திறப்பு
சென்னை: யூனிநார் தொலை தொடர்பு நிறுவனம், தமிழகம் மற்றும் கேரள மாநிலத்திற்கான தலைமை அலுவலகத்தை சென்னையில் திறந்தது. காரப்பாக்கம், பழைய மகாபலிபுரம் சாலையிலுள்ள டெசி பூங்காவில், யூனிநாரின் சென்னை அலுவலகத்தை, தமிழகம் மற்றும் கேரள மாநிலங்களின் தலைமைப் பொறுப்பேற்றுள்ள ஸ்டீபன் கெர்ஜா திறந்து வைத்தார். சிறப்பு விருந்தினராக புகாரி குழுமத்தின் மேலாண் இயக்குனர் அப்துல் காதிர் கலந்து கொண்டார். ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் வடிவமைப்பு விதிகளுக்கு உட்பட்டு, யூனிநார் அலுவலகம் கட்டப் பட்டுள்ளதால், இந்திய பசுமை கட்டுமான அமைப்பிடம் இருந்து, வெள்ளி விருது சான்றிதழ் பெற்றுள்ளது.

இது குறித்து ஸ்டீபன் கெர்ஜா கூறியதாவது: மக்களின் தேவையை உணர்ந்து, திறந்த நிலை தொடர்பு மற்றும் ஒளிவுமறைவு இல்லாத வகையில், எவ்விதமான கேபின்களும் இல்லாமல் வடிவமைக்கப்பட்டுள்ளது. கான்பரன்சிங் மற்றும் கூட்டங்களுக்காக மட்டும் ஒரு சில அறைகள், கண்ணாடியால் அமைக்கப்பட்டுள்ளன. வீடியோ கான்பரன்சிங் வசதியை ஊழியர்கள் பயன்படுத்த ஊக்குவிப்பதன் மூலம், தேவையில்லாத போக்குவரத்து மற் றும் காகிதங்களின் செலவை குறைக்கப் போகிறோம். சுகாதாரம், பாதுகாப்பு, சுற்றுச்சூழல் ஆகியவற்றில் இந்நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்துகிறது. இவ்வாறு ஸ்டீபன் கெர்ஜா கூறினார்.




0 கருத்துகள்:

கருத்துரையிடுக